பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடுநூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
பெரியாழ்வார் இறைவனுக்கே மங்களம் பாடும் பதிகம். பாண்டியன் அவையில் இறைவனை நேரில் கண்டபோது, அவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி "பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்துகிறார். மோட்சம் வேண்டுவோர், தன்னையே அனுபவிப்போர், செல்வம் நாடுவோர் என அனைவரையும் அழைத்து, தம்முடன் சேர்ந்து மங்களம் பாடச் சொல்கிறார். இறைவனிடம் ஏதும் கேட்காமல், அவனுக்காகவே வாழ்த்துவது இப்பிரபந்தத்தின் தனிச்சிறப்பு — அதனாலேயே இது நாலாயிரத்தின் முதலிடம் பெறுகிறது.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
ஏடநிலத்தில் இடூவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ ர் நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
அண்டக் குலத்துக்கதிபதியாகி அசுரர் இராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தொண்டக் குலத்திலுள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே
எந்தைதந்தைதந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடூதுமே
தீயில் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப் பகைக் கொடுயானுக்குப் பல்லாண்டு கூறுவனே
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
எந்நாள் எம்பெருமான் உன்தனுக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்றுய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே பெரியாழ்வார் திருவடிகளே சரணம்