Skip to the text
துவயச்சுருக்கு

துவயச்சுருக்கு

வேதாந்த தேசிகர் · தேசிக பிரபந்தம்

தனியன்சீரொன்று தூப்புல்‌ திருவேங்கடம்‌ உடையான்‌ பாரொன்றச்‌ சொன்ன பழமொழியுள்‌ - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில்‌ வாழ்வார்க்கு வானேறப்‌ போமளவும்‌ வாழ்வு
Essence of this decad

துவய மந்திரத்தின் பொருளை விளக்கும் பன்னிரு பாசுரங்கள். "இன்னமுதில் பிறந்தாள் இதம் கேட்க உரைத்த பிரான்" — திருமகள் நம் நலம் கேட்க, அவளுக்காக அருள் செய்தவனைச் சொல்கிறது. இறைவனை அணுகும் வழி தாயார் வழியாகவே என்பதை இந்நூல் நிலைநாட்டுகிறது. புருஷகாரம் என்னும் கருத்தின் தமிழ் வடிவம் இது.

1

இன்னமுதில்‌ பிறந்தாள்‌ இதம்‌ கேட்க உரைத்த பிரான்‌ பொன்னருளால்‌ மறை மெளலியில்‌ பூண்ட இரண்டிசைத்து தன்னுரை மிக்கதனம்‌ இதெனத்‌ தந்த வேதகத்தில்‌ துன்னு பொருள்கள்‌ பத்தும்‌ தொலையா நிதி ஆகின்றவே

2

அருவுருவானவை தன்னை அடைந்திடத்‌ தான்‌ அடைந்து வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும்‌ வினை விலக்கி இருதலை அன்புதனால்‌ எமை இன்னடி சேர்த்தருளும்‌ திருவுடனே திகழ்வார்‌ செறிந்தார்‌ எங்கள்‌ சிந்தையுள்ளே

3

ஓர்‌ உயிராய்‌ நின்ற ஒண்‌ சுடர்‌ இன்ப உருத்தனிலும்‌ பேர்‌ உருவத்திலும்‌ பின்னதில்‌ தோற்றும்‌ உருக்களிலும்‌ ஓர்‌ உருவான உலகிலும்‌ ஏற்கும்‌ உருக்களினால்‌ சேருதல்‌ மன்னு செய்யாள்‌ அன்பர்‌ நம்‌ மனம்‌ சேர்ந்தனரே

4

காரணமாய்‌ இறையாய்க்‌ கதியாய்‌ அமரும்‌ பதியாய்‌ ஆரணம்‌ ஓதும்‌ அனைத்துறவாய்‌ அகலா உயிராய்ச்‌ சீர்‌ அணியும்‌ சுடராய்ச்‌ செறிந்தெங்குந்‌ திகழ்ந்து நின்ற நாரணனார்‌ நமக்காய்‌ நல்கி நாம்‌ தொழ நின்றனரே

5

வானமர்‌ மன்னுருவாய்‌ வகையால்‌ அதில்‌ நாலுருவாய்‌ மீனமதாமை கேழல்‌ முதலாம்‌ விபவங்களுமாய்‌ ஊனமர்‌ உள்ளுருவாய்‌ ஒளியாத அருச்சையுமாம்‌ தேனமர்‌ செங்கழலான்‌ சேர்த்தனன்‌ கழல்‌ எம்‌ மனத்தே

6

வேறொர்‌ அணங்கு தொழும்‌ வினை தீர்த்தெமையாண்டிடுவான்‌ ஆறும்‌ அதன்‌ பயனும்‌ தந்தளிக்கும்‌ அருளுடையான்‌ மாறிலதாய்‌ இலகும்‌ மது மெல்லடிப்‌ போதிரண்டால்‌ நாறுதுழாய்‌ முடியான்‌ நமக்குச்‌ சரண்‌ ஆயினனே

7

பெறுவது நாம்‌ பெரியோர்‌ பெறும்பேறென நின்றவெம்மை வெறுமை உணர்த்தி விலக்காத நன்னிலை ஆதரிப்பித்து உறுமதியால்‌ தனை ஒண்‌ சரணென்ற உணர்வு தந்த மறுவுடை மார்பனுக்கே மன்னடைக்கலம்‌ ஆயினமே

8

அருமறை யாதும்‌ துறவோமென அறிந்தார்‌ கவரும்‌ கருமமும்‌ ஞானமும்‌ காதலும்‌ கண்டு முயலகிலோம்‌ வருவதும்‌ இந்நிலையாய்‌ மயலுற்ற எமக்குளதோ திருமகளார்‌ பிரியாத்‌ திருமால்‌ அன்றி நல்‌ சரணே

9

சுருங்கா அகிலமெல்லாம்‌ துளங்கா அமுதக்‌ கடலாய்‌ நெருங்காதணைந்துடனே நின்ற நம்‌ திருநாரணனார்‌ இரங்காத காலங்களெல்லாம்‌ இழந்த பயன்பெற ஓர்‌ பெருங்காதல்‌ உற்றினிமேல்‌ பிரியாமை உகந்தனமே

10

கடிசூடு மூன்றும்‌ கழல்‌ பணிந்தார்க்குக்‌ கடிந்திடவே முடிசூடி நின்ற முகில்‌ வண்ணனார்‌ முன்‌ உலகளந்த அடிசூடும்‌ நாமவர்‌ ஆதரத்தால்‌ உடுத்துக்‌ களையும்‌ படி சூடி அன்புடனே பணிசெய்யப்‌ பணிந்தனமே

11

தனதன்றிவையெனத்‌ தானன்றென மறை சொன்ன வெலாம்‌ எனதென்றும்‌ யானென்றும்‌ எண்ணுதலால்‌ வரும்‌ ஈனமெலாம்‌ மனதொன்றி இன்று நம என்றதே கொண்டு மாற்றுதலால்‌ தனதன்றி ஒன்றுமில்லாத்‌ தனித்தாதை சதிர்த்தனனே

12

சேர்க்கும்‌ திருமகள்‌ சேர்த்தியின்‌ மன்னுதல்‌ சீர்ப்‌ பெரியோற்கு ஏற்கும்‌ குணங்கள்‌ இலக்காம்‌ வடிவில்‌ இணையடிகள்‌ பார்க்கும்‌ சரணதில்‌ பற்றுதல்‌ நம்நிலை நாம்‌ பெறும்‌ பேறு ஏற்கின்றவெல்லைகள்‌ எல்லாம்‌ களையறவெண்ணினமே