ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க தானவன் ஆகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த என் தலைவன் ர் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நல் நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
1-4. ஏனமுனாகி
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
ஏனமாய் நிலத்தை இடந்தெடுத்த வராக அவதாரத்தில் தொடங்கும் பதிகம். இரணியனின் ஆகம் தரணியில் புரள, சிலை குனித்த வீரம் என அவதாரங்களின் காட்சிகள் வரிசையாக வருகின்றன. காக்கும் பொருட்டு உருவெடுத்த ஒவ்வொரு வடிவமும் ஒரே இறைவனுடையது என்பதை ஆழ்வார் மீண்டும் நிலைநாட்டுகிறார்.
பெரிய திருமொழி 1-4 - ஏனமுனாகி (திருவதரியாச்சிரமம்)
கானிடை உருவைச் சுடு சரம் துரந்து கண்டு முன் கொடுந்தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடுகணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் தேனுடைக் கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
இலங்கையும் கடலும் அடலருந்துப் பின் இருநிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலிலுரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண்துகிற் கொடு என விரிந்து வலந்தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே! தொழுதெழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெருவிசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான் அணிமலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணிநீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெருமுலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் ர் சேய்முகட்டூச்சி அண்டமும் சுமந்த செம்பொன்செய் விலங்கலில் இலங்கு வாய்முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
தேரணங்கு அல்குல் செழுங்கையற் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து பாரணங்கிமில் ஏறேழும் முன் அடர்த்த பனிமுகில் வண்ணன் எம்பெருமான் காரணந்தன்னால் கடும்புனல் கயத்த கருவரை பிளவெழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
வெந்திறல் களிறும் வேலை வாய் அழுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம்பெருமான் அந்தரத்து அமரர் அடியிணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி மந்தரத்திழிந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
மான் முனிந்து ஒருகால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன் ' தகைத்த ஊன் முனிந்து அவனது உடல் இருபிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
கொண்டல் மாருதங்கள் குலவரை தொகுநீர்க் குரைகடல் உலகுடன் அனைத்தும் உண்ட மாவயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் அண்டம் ஊடறுத்து அன்று அந்தரத்திழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் மண்டு மாமணிநீர்க் கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானே
வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரை மேல் வதரியாச்சிராமத்து உள்ளானை கருங்கடல் முன்னீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல் வரஞ்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி இருங்கடல் உலகம் ஆண்டு வெண்குடைக் கீழ் இமையவர் ஆகுவர் தாமே
அடிவரவு: ஏனம் கானிடை இலங்கை துணிவு பேய் தேர் வெந்திறல் மான் கொண்டல் வருந்திரை கலை