வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே! இனிது வந்து மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்துறைகின்ற எந்தை கானவரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
2-1. வானவர்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"வானவர் தங்கள் சிந்தை போல" — தேவர்களின் உள்ளத்தில் உறைவதுபோல் தன் நெஞ்சிலும் இனிதே வந்து இறைவன் அமர்ந்ததை ஆழ்வார் சொல்கிறார். நெஞ்சத்தையே விளித்துப் பேசும் இப்பதிகம், இறைவன் உறையும் இடம் ஒரு தலம் மட்டுமல்ல, பக்குவப்பட்ட மனமும்தான் என்பதைக் காட்டுகிறது.
பெரிய திருமொழி 2-1 - வானவர் (திருவேங்கடம் 4)
உறவு சுற்றம் என்று ஒன்றிலா ஒருவன் உகந்தவர் தம்மை மண்மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்! குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து அறவ நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
இண்டையாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் - வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்! ர வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை அண்டம் ஆண்டிருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை - மண்மிசை மேவி ஆட்கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை கோவி நாயகன் கொண்டலுந்துயர் வேங்கட மலை ஆண்டு வானவர் ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
பொங்கு போதியும் பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை தங்கள் தேவரும் தாங்களுமேயாக என் நெஞ்சம் என்பாய்! எங்கும் வானவர் தானவர் நிறைந்தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள் அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
துவரியாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டியுண்டு பின்னரும் கோவல் தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்! கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் - விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவார் அலக்கண் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்! மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் - வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந் தே என் நெஞ்சம் என்பாய்! எனக்கு ஒன்று சொல்லாதே வேய்கள் நின்று வெண்முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய ஆய! நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
கூடி ஆடி உரைத்ததே உரைத்தாய் என் நெஞ்சம் என்பாய்! துணிந்து - கேள் பாடி ஆடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா 5 ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
மின்னு மாமுகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை கன்னி மாமதிள் மங்கையர் கலிகன்றி இன்தமிழால் உரைத்த இம் மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே
அடிவரவு: வானவர் உறவு இண்டை பாவியாது பொங்கு துவரி தருக்கினால் சேயன் கூடி மின்னு காசையாடை