பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி தன்னியலோசை சலன்சலனென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் என்னிடைக் கோட்டரா அச்சோவச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ
1-8. பொன்னியல்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"அச்சோ அச்சோ" — "வந்து என்னைத் தழுவு" என்று யசோதை அழைக்கும் பதிகம். சங்கும் சக்கரமும் ஏந்திய அந்தக் கைகளால் வந்து அணைக்க வேண்டும் என்று தாய் வேண்டுகிறாள். இடையிடையே காளியன் மேல் நடனமாடியது, தூதுவனாய்ச் சென்றது, கூனியை நிமிர்த்தியது என அவனது செயல்கள் நினைவுகூரப்படுகின்றன. இறைவனை அணைத்துக்கொள்ள விரும்பும் ஆசை இங்கே தாயின் மொழியில் பேசுகிறது.
பெரியாழ்வார் திருமொழி 1-8 பொன்னியல் (அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப சங்குவில் வாள்தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே வந்து அச்சோவச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ ஆயர் பெருமானே அச்சோவச்சோ
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன தேறி அவளும் திருவுடம்பில் பூச ஊறிய கூனினை உள்ளே ஒடங்க அன்று ஏற உருவினாய் அச்சோவச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோவச்சோ ஆழியங்கையனே அச்சோவச்சோ
போரொக்கப் பண்ணி இப்பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும் மேனிக் கரும் பெருங்கண்ணனே ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ ஆயர்கள் போரேறே அச்சோவச்சோ
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோவச்சோ சங்கமிடத்தானே அச்சோவச்சோ
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோவச்சோ வேங்கடவாணனே அச்சோவச்சோ
கண்ட கடலும் மலையும் உலகேழும் முண்டத்துக்காற்றா முகில் வண்ணாவோ என்று இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோவச்சோ மார்வில் மறுவனே அச்சோவச்சோ
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அச்சோவச்சோ அருமறை தந்தானே அச்சோவச்சோ
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருகவென்று ஆய்ச்சி உரைத்தன மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன் சொல் நிச்சலும் பாடூவார் நீள்விசும்பாள்வரே