கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அழுதூறும் என் நாவுக்கே
கண்ணிநுண் சிறுத்தாம்பு
மதுரகவியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
மதுரகவி ஆழ்வார் அருளிய பதினொரு பாசுரங்கள். கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ட கண்ணனைப் பாடி, உடனே தன் ஆசிரியனாகிய நம்மாழ்வாரிடம் திரும்புகிறார். "நான் அறிவது என் நாவினால் அவன் புகழையே பாடுவது" என்று தன் வழியைத் தெளிவாக அறிவிக்கிறார். இறைவனை நேரடியாக அல்லாமல் ஆசிரியன் வழியாக அடையும் நெறியை நிலைநாட்டும் இந்நூல், முதலாயிரத்தை நிறைவு செய்கிறது.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே
திரிதந்தாகிலும் தேவ பிரானுடை கரிய கோலத் திரு உருக் காண்பன் நான் பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் ஆதலின் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டுடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே (க)
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம் செம்பொன் மாடத் திருக்குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் ர குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே
கண்டு கொண்டென்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி அருளினான் ர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் ர் தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆள் புக்க காதல் அடிமைப் பயனன்றே
பயன் அன்றாகிலும் பாங்கல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கன்பையே
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்