அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
அமலனாதிபிரான்
திருப்பாணாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
திருப்பாணாழ்வார் அருளிய பத்துப் பாசுரங்கள். அரங்கனின் திருவடி முதல் திருமுகம் வரை ஒவ்வொரு அங்கமாகக் கண்டு, ஒவ்வொன்றும் தன் கண்ணையும் மனத்தையும் கவர்ந்ததைச் சொல்கிறார். இறுதிப் பாசுரத்தில், "என் கண்கள் இனி வேறொன்றைக் காணா" என்று முடிக்கிறார். மிகச் சிறிய நூல்; ஆனால் ஒரு முழுமையான தரிசனத்தை அது முழுதுமாகச் சொல்லிவிடுகிறது.
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே
மந்தி பாய் வட வேங்கட மாமலை ர வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவினணையான் அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்ததோர் எழில் உந்தி மேல் அதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுமிரே
சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கிறைவன் தலை பத்து உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன் மதுரமா வண்டு பாட மாமயில் ஆடரங்கத்தம்மான் திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே க
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான் கோரமா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு ஆர மார்பதன்றோ அடியேனை ஆட்கோண்டதே
துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் ர அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார் அணி அரங்கனார் அரவினணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
ஆலமா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவினணையான் கோலமா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
Essence of pasuram 930
மது பொழியும் வண்டு பாட, மயில் ஆடும் அரங்கத்தம்மானின் திருவயிற்று உதரபந்தம் ஆழ்வாரின் உள்ளத்துள் நின்று உலாவுகிறது. ஓதவண்ணனாம் அப்பெருமானின் திருவயிற்றின் எழிலில் அவர் ஈடுபடுகிறார். திருநாபிக்கு மேல் ஏறி, இறைவனின் திருவயிற்றையும் உதரபந்தத்தையும் அனுபவிக்கும் படி இது.