வந்தாளினிணை வணங்கி வள நகரம் தொழுதேத்த மன்னனாவான் நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடூங்கானம் படரப் போகு என்றாள் எம் இராமாவோ உனைப் பயந்த கைகேசி தன் சொற் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன்மகனே உன்னை நானே
9. வந்தாளினிணை
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
இறைவன் எழுந்தருளியிருக்கும் நகரைத் தொழுது ஏத்தும் பதிகம். ஊரே வந்து திருவடிகளை வணங்கி வாழ்த்தும் காட்சியை ஆழ்வார் விவரிக்கிறார். தனி மனிதனின் பக்தி ஒரு ஊரின் கூட்டு வழிபாடாக விரிவதை இப்பதிகம் காட்டுகிறது.
பெருமாள் திருமொழி - 9 வந்தாளினிணை (தனயன் வனம் புகத் தசரதன் புலம்புதல்)
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே
கொல்லணைவேல் வரிநெடூங்கண் கெளசலை தன் குல மதலாய் குனிவில்லேந்தும் மல்லணைந்த வரைத் தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்றினிப் போய் வியன் கானமரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே
வா போகு வா இன்னம் வந்தொருகால் கண்டு போ மலராள் கூந்தல் வேய் போலும் எழில் தோள் இதன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் மா போகு நெடூங்கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே
பொருந்தார் கைவேல் நுதிபோல் பரல் பாய மெல்லடிக்கள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற அரும் பாவி சொற் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச் சொல் கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத்திடை அழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாதுச்சி ர கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருக்கின்றேனே
போமருவு நறுஞ்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத் தக்க வனம் தான் சேர்தல் தூமறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகியையும் வனத்திற் போக்கி நின்பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே
முன்னொரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய் உரையும் மெய்யாகக் கொண்டு வனம் புக்க எந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடூந்தோள் வேந்தே
தேனகு மாமலர்க் கூந்தல் கெளசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ கூன் உருவில் கொடும் தொழுத்தை சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்காற்றா தாரார்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை கூரார்ந்த வேல்வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறிக்கண் செல்லார் தாமே