மன்னு புகழ்க் கெளசலை தன் மணி வயிறு வாய்த்தவனே தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் கன்னி நன்மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
8. மன்னு புகழ்
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
கௌசலையின் மணிவயிற்றில் தோன்றியவனை நினைந்து, இராமன் காடு செல்லும் நிலையில் தசரதன் அரற்றும் பதிகம். கொடுத்த வாக்கின் காரணமாக மகனைப் பிரிய நேர்ந்த ஒரு தந்தையின் துயரம் இங்கே முழுமையாகப் பேசுகிறது. ஒரு பேரரசன் தன் சொல்லுக்குச் செலுத்திய விலை என்ன என்பதை இப்பதிகம் நினைவுபடுத்துகிறது.
பெருமாள் திருமொழி - 8 மன்னு புகழ் (சக்ரவர்த்தித் திருமகனைக் கெளசலையார் தாலாட்டும் பாசுரம்)
புண்டரிக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே திண்திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய் கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே எண்திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ
கொங்குமலி கருங் குழலாள் கெளசலை தன் குல மதலாய் தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே எங்கள் குலத்தின்னமுதே இராகவனே தாலேலோ
தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே தயரதன் தன் மாமதலாய் மைதிலி தன் மணவாளா வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே சீராளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்தரசே தாராளும் நீண்முடி என் தாசரதீ தாலேலோ
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின்மணி கரை அலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ
மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ
தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குல மதலாய் வளைய ஒரு சிலை அதனால் மதிள் இலங்கை அழித்தவனே களை கழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே காவிரி நல்நதி பாயும் கணபுரத்தென் கருமணியே ஏவரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ
கன்னி நன்மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடி மேல் தாலேலோ என்றுரைத்த தமிழ் மாலை கொல்நவிலும் வேல்வலவன் குடைக் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே