தேட்டரும் திறல் தேனினைத் ர தென்னரங்கனைத் திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் ர் ஆட்டமேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே
2. தேட்டரும் திறல்
குலசேகர ஆழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"தேட்டரும் திறல் தேனினை" — கிடைத்தற்கரிய தேன் போன்ற தென்னரங்கனை நினைத்து ஆழ்வார் உருகும் பதிகம். அவனைப் பிரிந்திருக்க இயலாத நிலையையும், அவ்வூரிலேயே தங்கிவிட வேண்டும் என்ற ஆசையையும் மீண்டும் மீண்டும் சொல்கிறார். சுவை, ஒளி, இனிமை என உணர்வுக்கு உரிய சொற்களாலேயே இறைவனை அணுகுவது இப்பதிகத்தின் இயல்பு.
பெருமாள் திருமொழி - 2 தேட்டரும் திறல் (அரங்கன் மெய்யடியாரது அடிமைத் திறத்தில் ஈடுபடுதல்)
தோடுலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர் வாளியால் நீடுமா மரம் செற்றதும் நிரை மேய்த்தும் இவையே நினைந்து ஆடிப் பாடி அரங்கவோ என்றழைக்கும் தொண்டரடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே
ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப் பாடி வண் பொன்னிப்பே ராறு போல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்சேறு என் சென்னிக்கணிவனே
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்றாய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே
பொய்சிலைக் குரலேற்றெருத்தமிறுத்துப் போரர வீர்த்த கோன் செய்சிலைச் சுடர் சூழொளித் திண்ண மாமதிள் தென் அரங்கனாம் மெய்சிலைக் கருமேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழப் போய் மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே
ஆதியந்தம் அனந்தம் அற்புதமான வானவர் தம் பிரான் பாத மாமலர் சூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திட தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே
காரினம் புரை மேனி நற்கதிர் முத்த வெண்ணகைச் செய்ய வாய் ஆரமார்வன் அரங்கன் என்னும் அரும்பெரும் சுடர் ஒன்றினை சேரும் நெஞ்சினராகிச் சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால் வார நிற்பவர் தாளிணைக்கு ஓர் வாரமாகும் என் நெஞ்சமே
மாலையுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய் மாலையுற்ற வரைப் பெருந்திரு மார்வனை மலர்க் கண்ணனை மாலையுற்றெழுந்தாடிப் பாடித் திரிந்து அரங்கள் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே
மொய்த்துக் கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்துக் கும்பிடு நட்டமிட்டெழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி என் அத்தனச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே
அல்லிமாமலர் மங்கை நாதன் ர அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தனாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே