மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி, யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை
ஆண்டாள் · முதலாயிரம்
Essence of this decad
ஆண்டாள் அருளிய முப்பது பாசுரங்கள் — மார்கழி நோன்பின் நாட்குறிப்பு. உறங்கும் தோழியரை ஒவ்வொருவராக எழுப்பி, நந்தகோபன் மாளிகைக்குச் சென்று, காவலனையும் யசோதையையும் எழுப்பி, இறுதியில் கண்ணனையே எழுப்புகிறார்கள். பறை கேட்பதாகத் தொடங்கும் நோன்பு, முடிவில் "உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்ற ஒரே வேண்டுதலில் நிறைவடைகிறது. குளிரும் விடியலும் பசுக்களும் நிறைந்த எளிய ஊர்க்காட்சிக்குள் ஆழமான சரணாகதி பொதிந்திருக்கிறது.
வையத்து வாழ்வீர்காள், நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குதளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
ஓங்கி உலகளந்த, உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறுஞ் செந்நெலூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில், பொறிவண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
ஆழி மழைக் கண்ணா, ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழியன் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் க
மாயனை, மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம், தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில், துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
கீசு கீசென்று எங்கும், ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த, தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய், பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
தூமணி மாடத்துச், சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் ஊமையோ, அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
நோற்றுச் சுவர்க்கம், புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த, கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்
கற்றுக் கறவைக், கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே போதராய் ர சுற்றத்து தோழிமார், எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
கனைத்திளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக், கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண், போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்
உங்கள் புழைக்கடைத், தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடுக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடூவான் போதந்தார் எங்களை முன்னம், எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்
எல்லே இளங்கிளியே, இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டூரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
நாயகனாய் நின்ற, நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடுத் தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணிவண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடூவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
அம்பரமே தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடறுத்து, ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்
உந்து மதகளிற்றன், ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
குத்து விளக்கெரியக், கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய், நீ உன் மணாளனை எத்தனை போதும் துமிலெழ ஜஓட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
முப்பத்து மூவர், அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய் செப்பென்ன மென்முலைச், செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
ஏற்ற கலங்கள், எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற, சுடரே துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற் கண் ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே, எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டூப் போதருமா போலே, நீ பூவைப் பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோர் எம்பாவாய்
அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய், குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
மாலே மணிவண்ணா, மார்கழி நீராடூவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடூங்க முரல்வன பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள், போய்ப்பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
கூடாரை வெல்லும் சீர்க், கோவிந்தா உன்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய, பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்
சிற்றஞ் சிறு காலே, வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான், அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
வங்கக் கடல் கடைந்த, மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப்பறை கொண்டவாற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை, முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் ஆண்டாள் திருவடிகளே சரணம்
Essence of pasuram 501
பசுக்கள் பின்சென்று காட்டில் உண்ணும், அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில் உன்னைப் பெற்ற புண்ணியம் எமக்குண்டு என்று ஆண்டாள் பணிவுடன் கூறுகிறாள். "குறையொன்றுமில்லாத கோவிந்தா, உன்னோடு எமக்குள்ள உறவை ஒழிக்க ஒழியாது; அறியாப் பிள்ளைகள் நாங்கள்" என்கிறாள். இறைவனுக்கும் அடியார்க்கும் இடையிலான அறுக்கவொண்ணாத பந்தத்தை இது வலியுறுத்துகிறது.