ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கி மாளுமெல்லைக் கண்வாய் திறவாதே கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம்பரமன்றே
4-5. ஆசைவாய்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"அன்னை, அத்தன், என் புத்திரர், என் பூமி" என்று மயங்கிக் கிடக்கும் மனிதனை ஆழ்வார் விழிக்கச் செய்யும் பதிகம். ஆசை வழியே சென்ற சிந்தையோடு வாழ்நாள் முடியும் எல்லை வரை வந்துவிட்டோம் என்று நினைவூட்டுகிறார். இறுதி நாள் வரை காத்திராமல் இப்போதே இறைவனை அடையுங்கள் என்பது இதன் அறிவுரை. மிரட்டலாக அல்ல, விழித்தெழச் சொல்லும் அன்பான குரலாகவே இது ஒலிக்கிறது.
பெரியாழ்வார் திருமொழி 4-5 ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமல் இருக்கும் ஸம்ஸாரிகளுக்கு ஹிதோபதேசம் செய்தல்)
சீயினால் செறிந்தேறிய புண் மேல் செற்றலேறிக் குழம்பிருந்து எங்கும் ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோ நாரணாவென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் புணைக் கொடுக்கிலும் போகவொட்டாரே
சோர்வினால் பொருள் வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லென்று சுற்றுமிருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்தகாலம் அடைவதன் முன்னம் மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவனென்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவதண்டத்தில் உய்யலுமாமே
மேலெழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி காலும் கையும் விதிர் விதிர்த்தேறிக் கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் ர் மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே க
மடி வழி வந்து நீர்ப் புலன் சோர வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே கடை வழிவாரக் கண்டம் அடைப்பக் கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் ர் தொடை வழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் இடை வழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்றேத்த வல்லீரே
அங்கம் விட்டவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை சங்கம் விட்டவர் கையை மறித்துப் பையவே தலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டூலவும் கடற்பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் தங்க விட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே
தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்திருளற நோக்கி மன்னவன் மதுசூதன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரிப்படைக்கு ஒருபாகுடம் போலே கோடிமூடி எடுப்பதன் முன்னம் கெளத்துவமுடைக் கோவிந்தனோடு கூடியாடிய உள்ளத்தரானால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே
வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக்கண்கள் மிழற்ற தாய் ஒருபக்கம் தந்தை ஒருபக்கம் தாரமும் ஒருபக்கம் அலற்ற தீ ஒருபக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கெனச் சுற்ற மாய் ஒருபக்கம் நிற்க வல்லார்க்கு அரவதண்டத்தில் உய்யலுமாமே
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க் கோன் சித்தம் நன்கொருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே