Skip to the text
திருவாய்மொழி

9-4. மையார்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே! ... உன்னைக் காணக் கருதும் என் கண்ணே" — மார்பில் திருமகள் வீற்றிருக்க, கையில் சுடராழியும் சங்கும் ஏந்தும் திருமாலைக் காண என் கண்கள் ஏங்குகின்றன என்னும் பதிகம். காட்சிக்கான தாகமே இதன் அடிநாதம் — வேறொன்றும் அல்ல, அவனைக் கண்ணால் ஒருமுறை காணல். கண்ணின் ஏக்கத்தையே பதிகம் முழுதும் விரிக்கிறது.

திருவாய்மொழி 9-4 மையார்‌

3590

மையார்‌ கருங்கண்ணி கமல மலர்‌ மேல்‌ செய்யாள்‌ திருமார்வினில்‌ சேர்‌ திருமாலே! வெய்யார்‌ சுடராழி சுரிசங்கம்‌ ஏந்தும்‌ கையா! உன்னைக்‌ காணக்‌ கருதும்‌ என்‌ கண்ணே

3591

கண்ணே! உன்னைக்‌ காணக்‌ கருதி என்‌ நெஞ்சம்‌ எண்ணே கொண்ட சிந்தையதாய்‌ நின்றியம்பும்‌ விண்ணோர்‌ முனிவர்க்கு என்றும்‌ காண்பரியாயை நண்ணாதொழியேன்‌ என்று நான்‌ அழைப்பனே

3592

அழைக்கின்ற அடிநாயேன்‌ நாய்‌ கூழை வாலால்‌ குழைக்கின்றது போல என்னுள்ளம்‌ குழையும்‌ மழைக்கு அன்று குன்றம்‌ எடுத்து ஆநிரை காத்தாய்‌! பிழைக்கின்றது அருள்‌ என்று பேதுறுவனே

3593

உறுவது இதுவென்று உனக்கு ஆள்பட்டு நின்கண்‌ பெறுவது எதுகொல்‌ என்று பேதையேன்‌ நெஞ்சம்‌ மறுகல்‌ செய்யும்‌ வானவர்‌ தானவர்க்கு என்றும்‌ அறிவதரிய அரியாய அம்மானே!

3594

அரியாய அம்மானை அமரர்‌ பிரானை பெரியானைப்‌ பிரமனை முன்‌ படைத்தானை வரிவாள்‌ அரவினணைப்‌ பள்ளி கொள்கின்ற கரியான்‌ கழல்‌ காணக்‌ கருதும்‌ கருத்தே

3595

கருத்தே! உன்னைக்‌ காணக்‌ கருதி என்‌ நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன்‌ தேவர்கட்கெல்லாம்‌ விருத்தா! விளங்கும்‌ சுடர்ச்‌ சோதி உயரத்‌ தொருத்தா! உன்னை உள்ளும்‌ என்னுள்ளம்‌ உகந்தே

3596

உகந்தே உன்னை உள்ளும்‌ என்‌ உள்ளத்து அகம்பால்‌ அகந்தான்‌ அமர்ந்தே இடங்கொண்ட அமலா! மிகுந்தான்‌ அவன்‌ மார்வகலம்‌ இருகூறா நகந்தாய்‌ நரசிங்கமதாய உருவே!

3597

உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம்‌ பொருவாகி நின்றான்‌ அவன்‌ எல்லாப்‌ பொருட்கும்‌ அருவாகிய ஆதியைத்‌ தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக்‌ கண்டு கொண்டேனே

3598

கண்டு கொண்டு என்‌ கண்ணிணை ஆரக்‌ களித்து பண்டை வினையாயின பற்றோடறுத்து தொண்டர்க்கு அமுதுண்ணச்‌ சொல்மாலைகள்‌ சொன்னேன்‌ அண்டத்தமரர்‌ பெருமான்‌ அடியேனே

3599

அடியான்‌ இவன்‌ என்று எனக்கு ஆரருள்‌ செய்யும்‌ நெடியானை நிறைபுகழ்‌ அஞ்சிறைப்‌ புள்ளின்‌ கொடுயானை குன்றாமல்‌ உலகம்‌ அளந்த அடியானை அடைந்து அடியேன்‌ உய்ந்தவாறே

3600

ஆறா மதயானை அடர்த்தவன்‌ தன்னை சேறார்‌ வயல்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ நூறே சொன்ன ஓராயிரத்துள்‌ இப்பத்தும்‌ ஏறே தரும்‌ வானவர்‌ தம்‌ இன்னுயிர்க்கே