Skip to the text
திருவாய்மொழி

1-5. வளவேழ்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அருவினையேன் அணுகப் பெறுவேனோ?" — உலகின் முதல்வனை நான் நெருங்க முடியுமா என்று ஆழ்வார் தயங்கும் பதிகம். வெண்ணெய் திருடிய எளிமையை நினைவுகூர்ந்தே அத்தயக்கத்தைக் கடக்கிறார். தகுதியின்மையை உணர்வதும், அதனாலேயே விலகாமல் இருப்பதும் இப்பதிகத்தில் இணைகின்றன.

திருவாய்மொழி 1-5 வளவேழ்‌

2719

வளவேழ்‌ உலகின்‌ முதலாய வானோர்‌ இறையை அருவினையேன்‌ களவேழ்‌ வெண்ணெய்‌ தொடுவுண்ட கள்வா! என்பன்‌ பின்னையும்‌ தளவேழ்‌ முறுவல்‌ பின்னைக்காய்‌ வல்லானாயர்‌ தலைவனாய்‌ இளவேறேழும்‌ தழுவிய எந்தாய்‌! என்பன்‌ நினைந்து நைந்தே

2720

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர்‌ பலரும்‌ முனிவரும்‌ புனைந்த கண்ணி நீர்‌ சாந்தம்‌ புகையோடு ஏந்தி வணங்கினால்‌ நினைந்த எல்லாப்‌ பொருள்கட்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனஞ்செய்‌ ஞானத்து உன்‌ பெருமை மாசூணாதோ? மாயோனே!

2721

மாயோனிகளாய்‌ நடை கற்ற வானோர்‌ பலரும்‌ முனிவரும்‌ நீ யோனிகளைப்‌ படை என்று நிறை நான்முகனைப்‌ படைத்தவன்‌ சேயோன்‌ எல்லா அறிவுக்கும்‌ திசைகள்‌ எல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ எல்லா எவ்வுயிர்க்கும்‌ தாயோன்‌ தானோர்‌ உருவனே

2722

தானோர்‌ உருவே தனி வித்தாய்த்‌ தன்னில்‌ மூவர்‌ முதலாய வானோர்‌ பலரும்‌ முனிவரும்‌ மற்றும்‌ மற்றும்‌ முற்றுமாய்‌ தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி அதனுள்‌ கண்வளரும்‌ வானோர்‌ பெருமான்‌ மாமாயன்‌ வைகுந்தன்‌ எம்பெருமானே

2723

மானேய்‌ நோக்கி! மடவாளை மார்வில்‌ கொண்டாய்‌! மாதவா! கூனே சிதைய உண்டைவில்‌ நிறத்தில்‌ தெறித்தாய்‌! கோவிந்தா! வானார்‌ சோதி மணிவண்ணா! மதுசூதா! நீ அருளாய்‌ உன்‌ தேனே மலரும்‌ திருப்பாதம்‌ சேருமாறு வினையேனே

2724

வினையேன்‌ வினைதீர்‌ மருந்தானாய்‌! விண்ணோர்‌ தலைவா! கேசவா! மனைசேர்‌ ஆயர்‌ குலமுதலே! மாமாயனே! மாதவா! சினையேய்‌ தழைய மராமரங்கள்‌ ஏழும்‌ எய்தாய்‌! சிரீதரா! இனையாய்‌! இனைய பெயரினாய்‌! என்று நைவன்‌ அடியேனே

2725

அடியேன்‌ சிறிய ஞானத்தன்‌ அறிதல்‌ ஆர்க்கும்‌ அரியானை கடிசேர்‌ தண்ணண்துழாய்க்‌ கண்ணி புனைந்தான்‌ தன்னைக்‌ கண்ணனை செடியார்‌ ஆக்கை அடியாரைச்‌ சேர்தல்‌ தீர்க்கும்‌ திருமாலை அடியேன்‌ காண்பான்‌ அலற்றுவன்‌ இதனில்‌ மிக்கோர்‌ அயர்வுண்டே?

2726

உண்டாய்‌ உலகேழ்‌ முன்னமே உமிழ்ந்து மாயையால்‌ புக்கு உண்டாய்‌ வெண்ணெய்‌ சிறுமனிசர்‌ உவலையாக்கை நிலை எய்தி மண்‌ தான்‌ சோர்ந்ததுண்டேலும்‌ மனிசர்க்காகும்பீர்‌ சிறிதும்‌ ! நோக்கின்‌ அண்டா வண்ணம்‌ மண்‌ கரைய நெய்யூண்‌ மருந்தோ? மாயோனே!

2727

மாயோம்‌ தீயவலவலைப்‌ பெருமா வஞ்சப்‌ பேய்‌ வீய தூய குழவியாய்‌ விடப்பால்‌ அமுதா அழுது செய்திட்ட மாயன்‌ வானோர்‌ தனித்‌ தலைவன்‌ மலராள்‌ மைந்தன்‌ எவ்வுயிர்க்கும்‌ தாயோன்‌ தம்மான்‌ என்னம்மான்‌ அம்மா மூர்த்தியைச்‌ சார்ந்தே

2728

சார்ந்த இருவல்‌ வினைகளும்‌ சரித்து மாயப்‌ பற்றறுத்து தீர்ந்து தன்‌ பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி வீடு திருத்துவான்‌ ஆர்ந்த ஞானச்‌ சுடராகி அகலம்‌ கீழ்‌ மேல்‌ அளவிறந்து நேர்ந்த உருவாய்‌ அருவாகும்‌ இவற்றின்‌ உயிராம்‌ நெடுமாலே!

2729

மாலே! மாயப்‌ பெருமானே! மாமாயனே! என்றென்று மாலேயேறி மாலருளால்‌ மன்னு குருகூர்ச்‌ சடகோபன்‌ பாலேய்‌ தமிழர்‌ இசைகாரர்‌ பத்தர்‌ பரவும்‌ ஆயிரத்தின்‌ பாலே பட்ட இவை பத்தும்‌ வல்லார்க்கு இல்லை பரிவதே