சீதக்கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே
1-2. சீதக்கடல்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
பெரியாழ்வார் தாயின் இடத்தில் நின்று, குழந்தைக் கண்ணனை அடி முதல் முடி வரை வருணிக்கிறார். ஒவ்வொரு பாசுரத்திலும் ஊர்ப் பெண்களை "வந்து காணீரே" என்று அழைத்து, பாதம், முழங்கால், இடை, மார்பு, கை, கழுத்து, வாய், கண், புருவம், நெற்றி என ஒவ்வொரு அங்கத்தையும் காட்டுகிறார். இடையிடையே அக்குழந்தை செய்த வீரச் செயல்களையும் நினைவுகூர்கிறார். அழகை ரசிக்கும் தாயின் பார்வையும், இறைவனை உணரும் அடியவனின் பார்வையும் இங்கே ஒன்றாகின்றன.
பெரியாழ்வார் திருமொழி 1-2 சீதக்கடல் (கண்ணனது திருமேனி அழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே
பணைத்தோள் இளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை இணைக்காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும் கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே
உழந்தாள் நறுநெய் ஓரோர் தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்தெழில் மத்தின் பழந்தாம் பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர் வந்து காணீரே
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனை பருங்கிப் பறித்துக் கொண்டோடு பரமன் தன் நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளியிழையீர் வந்து காணீரே
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து பதரப் படாமே பழந்தாம் பாலார்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளிவளையீர் வந்து காணீரே
பெருமா உரலில் பிணிப்புண்டிருந்து அங்கு இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திருமார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழலீர் வந்து காணீரே
மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர் வந்து காணீரே
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே
எந்தொண்டைவாய்ச் சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு அந்தொண்டைவாய் அழுதாதரித்து ஆய்ச்சியர் தம் தொண்டைவாயால் தருக்கிப் பருகும் இச் செந்தொண்டைவாய் வந்து காணீரே சேயிழையீர் வந்து காணீரே
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டூம் இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழலீர் வந்து காணீரே
விண்கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண்கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர் வந்து காணீரே
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணிவண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண்முலையீர் வந்து காணீரே
மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ணம் எழில்கொள் மகரக் குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே
முற்றிலும் தூதையும் முன் கைம்மேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களை பற்றிப் பறித்துக் கொண்டோடும் பரமன் தன் நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்தெங்கும் ஆர்ப்ப மழகன்றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர் வந்து காணீரே
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடொன்றும் உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே