Skip to the text
பெரிய திருமொழி

5-3. வென்றி

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

மழுவேந்தி மண்மிசை மன்னரை மூவெழு கால் அழித்த பரசுராம அவதாரத்தை நினைவுகூரும் பதிகம். அவ்வாறு செய்தவனுடைய ஒலிக்கும் கழல்களைத் தொழும் வழியையே ஆழ்வார் வேண்டுகிறார். செயலின் கடுமையையும் அதைச் செய்தவனிடம் கொள்ளும் பணிவையும் ஒரே பாசுரத்தில் வைக்கிறார்.

பெரிய திருமொழி 5-3 - வென்றி (திருவெள்ளறை)

1368

வென்றி மாமழு ஏந்தி முன்‌ மண்‌ மிசை மன்னரை மூவெழுகால்‌ கொன்ற தேவ! நின்‌ குரை கழல்‌ தொழுவதோர்‌ வகை எனக்கு அருள்‌ புரியே மன்றில்‌ மாம்பொழில்‌ நுழை தந்து மல்லிகை மெளவலின்‌ போது அலர்த்தி தென்றல்‌ மாமணம்‌ கமழ்‌ தர வரு திருவெள்ளறை நின்றானே

1369

வசையில்‌ நான்மறை கெடுத்த அம்மலர்‌ அயற்கு அருளி முன்‌ பரிமுகமாய்‌ இசைகொள்‌ வேத நூல்‌ என்றிவை பயந்தவனே! எனக்கு அருள்‌ புரியே உயர்கொள்‌ மாதவிப்‌ போதொடு உலாவிய மாருதம்‌ வீதியின்‌ வாய்‌ திசை எல்லாம்‌ கமழும்‌ பொழில்‌ சூழ்‌ திருவெள்ளறை நின்றானே

1370

வெய்யனாய்‌ உலகேழுடன்‌ நலிந்தவன்‌ உடலகம்‌ இரு பிளவா கையில்‌ நீள்‌ உகிர்ப்‌ படையது வாய்த்தவனே! எனக்கு அருள்‌ புரியே மையினார்‌ தருவராலினம்‌ பாய வண்‌ தடத்திடைக்‌ கமலங்கள்‌ தெய்வ நாறும்‌ ஒண்‌ பொய்கைகள்‌ சூழ்‌ திருவெள்ளறை நின்றானே

1371

வாம்பரியுக மன்னர்‌ தம்‌ உயிர்‌ செக ஐவர்கட்கு அரசளித்த காம்பினார்‌ திருவேங்கடப்‌ பொருப்ப! நின்‌ காதலை அருள்‌ எனக்கு மாம்பொழில்‌ தளிர்‌ கோதிய மடக்குயில்‌ வாயது துவர்ப்பெய்த தீம்பலங்கனித்‌ தேனது நுகர்‌ திருவெள்ளறை நின்றானே

1372

மானவேல்‌ ஒண்கண்‌ மடவரல்‌ மண்மகள்‌ அழுங்க முந்நீர்ப்‌ பரப்பில்‌ ஏனமாகி அன்று இரு நிலம்‌ இடந்தவனே! எனக்கு அருள்‌ புரியே கான மாமுல்லை கழைக்‌ கரும்பு ஏறி வெண்முறுவல்‌ செய்து அலர்கின்ற தேனின்‌ வாய்‌ மலர்‌ முருகு உகுக்கும்‌ திருவெள்ளறை நின்றானே

1373

பொங்கு நீள்முடி அமரர்கள்‌ தொழுது எழ அமுதினைக்‌ கொடுத்தளிப்பான்‌ அங்கு ஓர்‌ ஆமை அதாகிய ஆதி! நின்‌ அடிமையை அருள்‌ எனக்கு தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்‌ தையலார்‌ குழல்‌ அணைவான்‌ திங்கள்‌ தோய்‌ சென்னி மாடம்‌ சென்றணை திருவெள்ளறை நின்றானே

1374

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி அரக்கன்‌ தன்‌ சிரம்‌ எல்லாம்‌ வேறு வேறுக வில்லது வளைத்தவனே! எனக்கு அருள்‌ புரியே மாறில்‌ சோதிய மரதகப்‌ பாசடைத்‌ தாமரை மலர்‌ வார்ந்த தேறல்‌ மாந்தி வண்டு இன்னிசை முரல்‌ திருவெள்ளறை நின்றானே

1375

முன்‌ இவ்வேழுலகு உணர்வின்றி இருள்‌ மிக உம்பர்கள்‌ தொழுதேத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே! எனக்கு அருள்‌ புரியே மன்னு கேதகை சூதகம்‌ என்றிவை வனத்திடைச்‌ சுரும்பு இனங்கள்‌ தென்னவென்று வண்டு இன்னிசை முரல்‌ திருவெள்ளறை நின்றானே

1376

ஆங்கு மாவலி வேள்வியில்‌ இரந்து சென்று அகலிடம்‌ முழுதினையும்‌ பாங்கினால்‌ கொண்ட பரம! நிற்பணிந்து எழுவேன்‌ எனக்கு அருள்‌ புரியே ஓங்கு பிண்டியின்‌ செம்மலர்‌ ஏறி வண்டு உழிதர மாவேறித்‌ தீங்குயில்‌ மிழற்றும்‌ படப்பை திருவெள்ளறை நின்றானே

1377

மஞ்சுலா மணி மாடங்கள்‌ சூழ்‌ திருவெள்ளறை அதன்‌ மேய அஞ்சனம்‌ புரையும்‌ திரு உருவனை ஆதியை அமுதத்தை நஞ்சு உலாவிய வேல்‌ வலவன்‌ கலிகன்றி சொல்‌ ஐயிரண்டும்‌ எஞ்சல்‌ இன்றி நின்று ஏற்ற வல்லார்‌ இமையோர்க்கு அரசு ஆவர்களே

அடிவரவு: வென்றி வசை வெய்ய வாம்பரி மானவேல்‌ பொங்கு ஆறு முன்‌ ஆங்கு மஞ்சு உந்திமேல்‌